திண்டுக்கல்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (செப்.23) காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். பின்னர், தேனி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன மாணவியின் தந்தை தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், இந்த நேர இடைவெளியில் மாணவியை காரில் கடத்திய மர்ம நபர்கள், தேனி பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி, மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த நிலையில், தேனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளரும் மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் திண்டுக்கல் ஏஎஸ்பி சிபின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர்.