தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

தேனி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; இருமாவட்ட போலீசார் தீவிர விசாரணை! - Nursing Student Sexual assault

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (செப்.23) காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். பின்னர், தேனி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன மாணவியின் தந்தை தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், இந்த நேர இடைவெளியில் மாணவியை காரில் கடத்திய மர்ம நபர்கள், தேனி பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி, மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்த நிலையில், தேனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளரும் மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் திண்டுக்கல் ஏஎஸ்பி சிபின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், திடீரென அம்மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிகிச்சை முடிந்த பின்பு அம்மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 16/24படி 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 70:இது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கான குற்றத்திற்கான தண்டனைகளைக் கையாள்கிறது. BNS பிரிவு 70(1) ன் படி, “ஒரு குழுவை உருவாக்கி அல்லது ஒரு பொதுவான நோக்கத்திற்காக செயல்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த நபர்கள் ஒவ்வொருவரும் அக்குற்றத்தைச் செய்ததாக கருதப்படுவார்கள்.

BNS-87 கட்டாயத் திருமணம் அல்லது சட்டவிரோத உடலுறவு தொடர்பான குறிப்பிட்ட நோக்கங்களுடன் பெண்களைக் கடத்தல் மற்றும் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களைக் குறிப்பிடுகிறது. இந்தச் செயல்களைச் செய்பவர்களுக்கும், இதுபோன்ற செயல்களைத் தூண்டுவதற்கு வற்புறுத்தலைப் பயன்படுத்துபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் தேனி டவுன் காவல்துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், அம்மாணவி அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை பரிசோதனைக்காக போலீசார் எடுத்து வந்துள்ளனர்.

தற்போது இரண்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details