சென்னை:கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு, அதன் பிறகு கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜன.24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக் கேட்பில் பல்வேறு திருத்தங்கள் இருந்ததால் அவைகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு முழு ஆவணமாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மாநில மகளிர் கொள்கையில் உள்ள சிறப்புகள்:மாநில மகளிர் கொள்கையில், மகளிருக்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துவது.
- கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தைக் கூடுதலாக 50 நாட்கள் நீடிப்பது.
- 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்குக் கல்வியில் முக்கியத்துவம் அளிப்பது, கல்வி இடைநிற்றல் காரணமாகப் படிப்பை நிறுத்தியவர்களை மீண்டும் கல்வியைத் தொடர வழிவகை செய்வது.
- அரசு தனியார் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவது.
- அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஆறு மாத கால சிறப்புப் பயிற்சி அளிப்பது.
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருப்பது தான் மாநில மகளிர் கொள்கை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பெண்களுக்குப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 33.3 சதவீதம் பிரதிநிதித்துவம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குதல் போன்றவையும் இதில் அடங்கும்.
அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஆறு மாத கால படிப்பில் வழங்கப்படும் பயிற்சிகள்:அரசியல் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு வழங்கப்படும் 6 மாத சிறப்புச் சான்றிதழ் படிப்பில், பதவியின் பணி என்ன?, அதன் முக்கியத்துவம். பதவியில் இருக்கும் போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? பதவிக்கான எதிர்பார்ப்புகள் என்ன? என்பதெல்லாம் கற்றுக்கொடுக்கப்படும். மேலும் அலுவலகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி, மற்றவரின் துணை இல்லாமல் பெண்கள் தாங்களாகச் செயல்படுவதற்கான பயிற்சி மற்றும் அரசியலில் போட்டியிடத் தேவையான பக்குவம் போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி பெண்களுக்கு அலுவலக விவகாரங்களை தாங்களாகவே கையாள உதவும்.