வீரலட்சுமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சென்னை: தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகார்களில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட பல்வேறு புகார்கள் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது 8 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், சென்னை மாநகர காவல்துறை சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் நடவடிக்கையும் எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு எதிராக, தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரியிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், சவுக்கு சங்கரின் கணக்கில் வராத கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாருக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வீரலட்சுமி, “சவுக்கு சங்கர் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார்.
இந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? அவருக்கு யார் கொடுத்தார்கள்? இவர் யாருக்கு பினாமியாக செயல்படுகிறார் என்று வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார். மேலும், அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர் வாங்கி வைத்திருக்கின்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாக கூறினார்.
அத்துடன், “சவுக்கு சங்கர் ஒரு தந்தையாக தனது கடமையைச் செய்யாமல் அதிலிருந்து வெளியே வந்தவர். அவரது இரண்டாவது மனைவி மாதம் 2,000 ரூபாய் கேட்டு ஜீவனாம்சம் கேட்டு வருகிறார். இவரது சொந்த வாழ்க்கையே இப்படி இருக்க, மற்ற பெண்களைக் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இழிவாகப் பேசி இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, தவறு செய்தவரை விட அதை தூண்டுபவர் தான் முதல் குற்றவாளி. ஆகையால், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும்'' என இவ்வாறு வீரலட்சுமி பேசினார்.
சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள எட்டு வழக்குகளில் ஒரு வழக்கு கடந்த மே 7ஆம் தேதி சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன?