தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 9:48 PM IST

ETV Bharat / state

வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? - மாநில வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் விளக்கம் - Waqf Board Amendment 2024

TN Waqf board chairman: இஸ்லாம் அல்லாதவர்கள் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என வக்பு சட்ட திருத்தம் சொல்லவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக வக்பு வாரிய தலைவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்ததிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 21 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

வக்பு வாரிய சட்டம்:வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 1995-ல் சட்டத்தில் திருத்தம் செய்து, வக்பு வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சட்ட திருத்தம் செய்தது.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது மீண்டும் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை செய்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது. அதன்படி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வக்பு வாரிய தலைவரின் கருத்து:வக்பு வாரிய சட்டத்தம் குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் ஈடிவி பாரத்திடம் கூறும் போது, "இஸ்லாமிய சமுதாயத்தை முன்னோர்கள் தயாள சிந்தனை உடையவரகள் மக்களின் பயன்பாட்டிற்காக அவர்களது சொத்துக்களை வழங்கினார்கள். அதுதான் தற்போது வக்பு சொத்துக்களாக உள்ளது.

அவற்றை முறையாக கண்காணிக்க, 1954ஆம் ஆண்டு வகுப்பு வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், 1958-ல் மாநிலத்தின் வக்பு வாரியங்கள் அந்தந்த மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. மேலும், 1995ஆம் ஆண்டு அந்த சட்டம் முழுமை படுத்தப்பட்டது.

அதனை சிறப்பாக செயல்படுத்த, 2013ஆம் ஆண்டு மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. முழுமையாக செயல்பட்டு வரும் இந்த சட்டத்தில் மேலும் சட்ட திருத்தம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. எந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் மட்டும் சட்ட திருத்தம் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருக்கும். மேலும் சொத்துக்களை மீட்க வக்பு வாரியத்திற்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், சொத்துக்களை மீட்பதில் சிக்கல் இருந்தால் சொத்துக்களை மீட்க தீர்ப்பாயம் உள்ளது, மேல்முறையீடு செய்ய வேண்டி நிலைவந்தால் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உள்ளது" எனக் கூறினார்.

சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? தொடர்ந்து பேசிய அவர், "வக்புவாரிய சட்டங்கள் மிக தெளிவாக இருக்கிறது. ஆனால் தற்போது சீர்திருத்தத்தில் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் கொண்டுவரப்பட்டிருப்பது உகந்ததாக இல்லை. இது அரசியல் சாசனத்தை மீறுவதாக இருக்கிறது.

வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த தகவல்களை வருவாய் துறையின் அடிப்படையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கலாம். ஆனால் வக்பு வாரிய சொத்துக்களை குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்களையும் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கலாம் என புதிய சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. 12 வக்பு வாரிய உறுப்பினர்களின் இரண்டு பேர் இஸ்லாம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என புதிய சட்ட திருத்தம் சொல்லுகிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் உறுப்பினராக இடம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்தந்த மதத்தினருக்குறிய வழிபாட்டு முறைகள் அந்தந்த மதித்தினரே அறிந்த ஒன்றாக இருக்கும். அவற்றை மாற்று மதத்தினரால் சரியாக செயல்பட முடியாது. எனவே வக்பு வாரிய உறுப்பினர்களாக மாற்று மதத்தினரை அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.

சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பது யார்?மேலும் பேசிய அவர், "இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்றால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் எதிர்க்கிறோம் என்பதல்ல. கோயில், தேவாலயம், குருத்துவார் வழிமுறைகளை அந்தந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும். அவர்கள் தான் அதை சரியாக செய்வார்கள்.

வக்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்பதற்காக தான் சட்டம் உள்ளது. வக்பு வாரியங்களில் முஸ்லிம்கள் சரிவர செயல்படவில்லை என்றால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அந்தந்த வழிபாட்டுத்தளங்களின் நிர்வாகத்தை செய்வதற்கு வழிமுறைகளும், விதிமுறைகளும் சட்டத்தில் தெளிவாக உள்ளது.

அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த, சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு மிக முக்கிய காரணம் மதக்காழ்புணர்ச்சியோடு, பிரச்சினைகளையும் குழப்பங்களையும் உருவாக்கி மக்களிடையே சண்டை சச்சரவுகளை நீடிக்க விரும்புகிறவர்கள் தான் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சகோதரத்துவ எண்ணம் இருப்பவர்கள் இந்த சட்டத்தை விரும்ப மாட்டார்கள், நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியர்களை விட இஸ்லாம் அல்லாதவர்கள் தான் அதிகமாக குரல் கொடுக்கின்றனர். நாடாளுமன்ற கூட்டு கமிட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆ.ராசா, அப்துல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதால் இது குறித்து அவர்கள் தெளிவாக பேசி பிரச்சனைகளை முன்னெடுத்து வைப்பார்கள். மேலும், நாடாளுமன்ற கூட்டு கமிட்டியில் ஒரே ஒரு உறுப்பினரை கொண்ட ஒவைசிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியினருக்கு கமிட்டியில் இடம் அளிக்காதது கண்டனத்திற்குரியது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சென்னை ஏர்போர்ட்டில் பிக்கப் பாயிண்ட் மாற்றம்.. சிரமத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details