சென்னை:தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவசரகால ஊர்தி சேவைகளை மேலும் செம்மையாகச் செயல்படுத்தும் வகையில், 72 புதிய "108" அவசரகால ஊர்திகள், மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான 4 புதிய நான்கு சக்கர அவசரகால ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊர்திகள் என மொத்தம் ரூ.29 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரம் செலவில் 143 ஊர்திகளின் சேவைகளையும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் என மொத்தமாக 147 அவசரகால ஊர்திகளை நேற்று (பிப்.4) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். அவசரகால சேவைகள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்திட 4 கோடியே 70 இலட்சத்து 93 ஆயிரத்து 745 ரூபாய் செலவில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1 கோடியே 12 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசரகால ஊர்திகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் –பாளையங்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப்பாய்வு கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவு பகுப்பாய்வு கூடங்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அனைத்து உணவு பகுப்பாய்வகங்களும், அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India) ஆகியவற்றால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.