தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:21 PM IST

ETV Bharat / state

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி உத்தரவு - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்! - Former Minister Senthil Balaji Case

Former Minister Senthil Balaji Case: மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி உத்தரவு

சென்னை:அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்.15) தெரிவித்துள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பிற்கு வங்கியிலிருந்து பெறப்பட்ட அசல் ஆவணங்கள் (செலான்) வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மா.கெளதமன் ஆஜராகி, வங்கியிலிருந்து கொடுக்கப்பட்ட அசல் செலான்களில் சில வேறுபாடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வங்கி ஆவணங்கள் தொடர்பாக மனுதாரர் தரப்பில் கூறக்கூடிய குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக இல்லை என்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு விசாரணை கோரும் மனுவில் ஏப்ரல் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32வது முறையாக நீட்டிப்பு! - Former Minister Senthil Balaji Case

ABOUT THE AUTHOR

...view details