சென்னை: சென்னை கோட்டத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 18ஆம் தேதி திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் (20666) ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) மற்றும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையேயான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
அதேபோல், ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.