கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், குரும்பபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். மேலும் சிலர் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் என்பவர் தனியாக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அதே அறையில் வெற்றிவேலுடன் தங்கியுள்ள சக மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன் பிரவீன் என்பவரின் செல்போனை சில தினங்களுக்கு முன்பு பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தீபக் என்ற மாணவர், அந்த கல்லூரியில் தொடர்பு இல்லாத வெளி ஆட்களை அழைத்துக்கொண்டு வெற்றிவேல் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால், அச்சமடைந்த அவர்கள் அறைக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாகவும், இதனிடையே சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.