தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களை தொடர்புபடுத்திய பேசிய விவகாரம்; மதுரை நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே மனுத்தாக்கல்! - Shobha Karandlanje case

Shobha Karandlanje: தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் இங்கு குண்டு வைக்கின்றனர் என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ரத்து செய்ய வேண்டும் என அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 7:35 PM IST

Madurai Bench
ஷோபா கரந்த்லாஜே (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஷோபா கரந்த்லாஜே, கர்நாடக மாநிலம் பெங்களூர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, பெங்களூர் நகரத்பேட்டையில் பேசும்போது, பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘தமிழகத்தில் பயிற்சி பெற்று வருபவர்கள் இங்கு வெடிகுண்டு வைக்கின்றனர்’ எனக் கூறினார்.

இவ்வாறான மத்திய அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு தமிழத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது பேச்சுக்கு ஷோபா கரந்த்லாஜே ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவு வெளியிட்டார். இதனிடையே தமிழர்கள், கன்னடர்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இதனால் ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் ஷோபா கரந்த்லாஜே மீது சைபர் கிரைம் போலீசார் 153, 153 (A), 505(1) (b), 505(2) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்த்லாஜே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளேன். இப்பேச்சு தொடர்பாக பெங்களூர் சிக்பேட்டை காவல் நிலையத்திலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது.

அதே பேச்சுக்கு மதுரையிலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கஃபே வழக்கில் கைதான நபர் சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சென்னையில் சோதனை நடத்தியுள்ளது.

தமிழர்களை நான் அவதூறாக பேசவில்லை. எனவே, மதுரை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்; ஷோபா கரந்த்லாஜே மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details