சென்னை:சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர் அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய ஆறு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கார்த்திக் முனுசாமி தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் தனிப்படை மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து, அவரை சென்னை அழைத்து வந்த போலீசார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.