கரூர்: இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து, கரூர் உழவர் சந்தையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, வாக்கு சேகரித்தார்.
அப்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது, பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாக, சிறையில் அடைத்து அமலாக்கத்துறை மூலம் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும், ஜாமீன் வழங்க நீதிமன்றம் மூலம் அநீதி இழைக்கப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவு பெற்று, வெளியே வருவார். அதற்கான நேரம் தற்பொழுது கூடியுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எதை வைத்து, வாக்கு சேகரிக்க வருகிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தது பாஜக. உரிமைகளைப் பறிப்பதற்குத் துணை போனது அதிமுக. இவர்களில் ஒருவர் விரோதி, இன்னொருவர் துரோகி. வாக்காளர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும். இந்த தேர்தல் என்பது தேசத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாக, 18வது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நாட்டையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் ஜோதி மணியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கையொப்பமிட மறுத்த உதய் திட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார்.