சென்னை:தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து, இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி ஊழலை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக இருக்கும் அதானி செய்துள்ளதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செலப்பெருந்தகை கண்டனம்:இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார்.
அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று, அதானி குழுமம் ரூ.3,000 கோடி கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம், தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும். குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு, இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் பிரதமர் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகி உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:மேலும் இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆசியுடன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கியதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பது புதிய ஆவணங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது அதானியின் துறைமுகத்திற்கு ஒரு ச.மீ 1 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் ஏராளமான நிலம் அள்ளித் தரப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியில் பிரதமர் மோடி அமர்ந்த பின்னர், கள்ளக்கூட்டு முதலாளித்துவ நடவடிக்கைகள் புதிய உச்சத்தை தொட்டன.