விழுப்புரம்:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசி வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது கஞ்சனூர் போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றம். விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று (பிப்.19) காலை விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியுள்ளாரே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அப்பா என்றால், இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள்.
அப்பா என்றால் குடிக்க வைக்க கூடாது:
அரசு ஆக்கிரமித்தால் சட்டம், மக்கள் ஆக்கிரமித்தால் குற்றமா? பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து, அரசு குப்பை மேடாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? நல்லாட்சி என்று சொல்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது போல, அறிஞர் அண்ணா என்று உள்ளது போல, அப்பா என்று அடையாளம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார். அப்பா என்றால் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும், நன்றாக குடிக்க வைக்க கூடாது" எனத் தெரிவித்தார்.
இந்தி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும்?
அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே மும்மொழிக் கொள்கை உள்ளதாக அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே? என்ற கேள்விக்கு, "அண்ணமலை ஐபிஎஸ் படித்தது போதாது எங்கள் வரைவு அறிக்கையை நன்றாக படிக்க வேண்டும்.
அதில் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம் என்று போட்டுள்ளோம். உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழி இந்தி உட்பட என்று போட்டு உள்ளோம். முதலில் அவர் தமிழனாக இருந்து பேச வேண்டும். இந்தி எனக்கு எதற்காக தேவை.