சென்னை:அரசியல் தலைவர்கள் குறித்து நிதானமாக பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அறிவுறுத்தும்படி அவரது வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது.
2019-ம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க:’விடாமுயற்சி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த த்ரிஷா
சீமான் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே வழக்கை தொடர்ந்து நடத்துவதில் தவறில்லை. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் சீமான் கோரிக்கையில் போதுமான ஆதாரங்கள் இல்லை,"எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, "நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கினை எதிர்கொண்டால் தான் இது போன்று பேசுவதை சீமான் நிறுத்துவார்,"என தெரிவித்தார்.
மேலும், "கடந்த 6 மாதங்களாக சீமானின் பேச்சு தலைவர்களை தாக்குவதாகவே உள்ளது. சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இது போன்ற கருத்துக்களை பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கும்படி சீமான் தரப்பு வழக்கறிருக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது," என நீதிபதி கூறினார்.