சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (42). இவரின் மனைவி தவமணி (38). இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் மகளும், 5 வயதில் ஒரு மகனும் என மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அசோக்குமார் நெய்வேலியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் நிலையில், உறவினர்கள் கூறிய சமாதானத்தின் பேரில் தமது குடும்பத்தைக் காண, அசோக்குமார் நெய்வேலியில் இருந்து சேலத்துக்கு நேற்றிரவு வந்துள்ளார்.
ஆனால் அப்போதும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அசோக்குமாரின் உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தவமணி மற்றும் அவரது மற்றொரு மகள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அசோக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.