தமிழ்நாடு

tamil nadu

'திருச்சி எஸ்பி தலை சிதறும்'.. ரவுடி என்கவுண்டருக்கு இன்ஸ்டாவில் மிரட்டல்.. கம்பி எண்ணும் குட்டி தாதா! - rowdy duraisamy encounter

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 12:50 PM IST

rowdy threatens trichy sp: திருச்சி எஸ்பிக்கு சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி துரைசாமியின் ஆதரவாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான ராஜபாண்டி, என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமி
கைதான ராஜபாண்டி, என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமி (credit - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி கடந்த 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைல மரகாட்டில் வைத்து போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர்.

இந்த நிலையில், இறந்துபோன துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில், "mgr-nagar- official" முகவரியில் இருந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து உள்ளனர். மேலும் கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்டதில், திருச்சி எம்.ஜி.ஆர்.நகர், பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தான் பதிவேற்றம் செய்தது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜபாண்டியனை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 29) குழுமணி உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாண்டியை பிடிக்க சென்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டி உள்ளார். உடனே போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜபாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுபோன்று பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. நெஞ்சை பிசையும் சோகம்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details