தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் ஏகேவி நகரில் வசித்து வருபவர் ரோக்கேஷ் (43). இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும் கும்பகோணம் பழைய அரண்மனைத் தெருவைச் சேர்ந்த திவ்யா (35) என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது இவர்களுக்கு 6 வயது மகள் உள்ளார். ரோக்கேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், திவ்யா சிறுக சிறுக சுமார் 200 சவரன் தங்க நகைகளை கணவரிடமிருந்து வாங்கியதாகவும், கணவர் ரோக்கேஷ் அனுப்பிய சுமார் 2 கோடி ரூபாய் பணத்தில் திவ்யா, தனது பெயரிலும், தனது பெற்றோர் பெயரிலும் சொத்துக்களாக வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்னம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருடன் திவ்யாவிற்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கணவர் ரோக்கேஷிடம் விவாகரத்து கோரியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு திவ்யாவிற்கும், நந்தகுமாருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் திவ்யாவின் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் சான்றாக ரோக்கேஷ் வைத்துக் கொண்டுள்ளதால், தன்னிடம் உள்ள சொத்துக்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அஞ்சிய திவ்யா, கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி இரவு நந்தகுமார் உள்ளிட்ட சிலர், ரோக்கேஷை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரோக்கேஷ் தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கும்பகோணம் கிழக்கு போலீசார், நந்தகுமார் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.