சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகின் வளரும் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பது போதைப் பொருட்கள். போதைப் பொருட்கள் மூலம் வளர்ச்சியை தடுக்க முடியும், தலைமுறையை அழிக்க முடியும். எனவே, நமது எதிரிகள் அதை ஆயுதமாக பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கின்றனர்.
போதைப் பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தனிநபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல, சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதைப் பொருட்கள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள் விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதைப் பொருட்களால் அதன் நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா தடை செய்யப்பட்ட் பொருள். ஆனால், இன்று அது சிகரெட் வடிவில் அதிகளவில் விற்பனை ஆகிவருகிறது. ஒரு காலத்தில் கஞ்சா மட்டுமே போதைப் பொருளாக அதனை பயன்படுத்துவோருக்கு கிடைத்தது. ஆனால், தற்பொழுது கொக்கைன், ஹெராயின் உட்பட 30க்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக, எல்எஸ்டி வகை போதைப் பொருட்கள் வந்துவிட்டது. இதற்கு இளைஞர்கள் அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக டன் கணக்கில் போதைப்பொருட்களை நம் நாட்டினுள் கடத்துகின்றனர்.