தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச யோகா தினம்; கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு! - RN Ravi

international yoga day: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில், வளமான தேசத்தை உருவாக்க நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலமும், குறிப்பாக இளைஞர்களின் உடல் நலமும் மன நலமும் அவசியமாகும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 12:45 PM IST

யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி (credits-ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி பல்வேறு தலைவர்கள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை செய்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு யோகா பயிற்சி மையங்களை சார்ந்த மாணவர்கள் பல்வேறு வகையான யோகாக்களை செய்துகாட்டினர். மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, " யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் ஆத்மாவிற்கும் நன்மை தரும் என சுட்டிக்காட்டினார். தொன்மை மிக்க யோகக்கலை என்பது நமது நாட்டினரால் மனித குலத்திற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்றும் யோகாவை எடுத்துரைத்த திருமூலரும் பதஞ்சலி சித்தர்களும் பிறந்த மண் இது என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தனிமனிதர்கள் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே யோகா நன்மை விளைவிக்கக் கூடியது என்றும் சர்வதேச எல்லைகளைக் கடந்து பல்வேறு மொழி, மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை தருவதாக யோகா உள்ளதாக கூறினார். இதை ஏற்றுக் கொள்ளும் விதமாக சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்றும் கொள்கை, மதம், தேசம் இவற்றைக் கடந்து உலக மக்கள் யோகக்கலையை போற்றி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது உடல் நலம் மட்டுமின்றி ஆன்மீக பலத்தையும் தருவதாகவும் மனநலத்தை பாதுகாப்பதோடு அறிவுத்திறனை மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் யோகா தொடர்புடைய தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்படுவதாகவும் அதில் மாணவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவன இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் வளமான தேசத்தை உருவாக்க நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலமும், குறிப்பாக இளைஞர்களின் உடல் நலமும் மன நலமும் அவசியம் என்றும் அதற்கு அனைவரும் யோகா பயிற்சியை வாழ்வின் ஒரு அங்கமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்."

நிகழ்ச்சிக்கு பின்னர் என் தாய் பெயரில் ஒரு மரம் என்ற தலைப்பில் நடைபெற்ற மரம் நடு விழாவில் கலந்து கொண்டு ஆளுநர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக ஹிந்தி எழுத்துக்களை பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஹிந்தி வார்த்தைகளை எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கதம்ப விழா!- மதுரையில் மாற்றத்திற்கான முழக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details