தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டங்ஸ்டன் திட்ட ஏலம் ரத்து..அடுத்தது என்ன? மதுரை மேலூர் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானம்! - JAN 26 GRAMA SABHA MEETING

டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் 35 க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்
கம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 7:51 PM IST

மதுரை:மத்திய சுரங்க துறையால் அறிவிக்கப்பட்டுள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மேலூர் பகுதி மக்கள், கடந்த ஆண்டு நவம்பர் 7 அன்று முதல், தங்களது பகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

ஜனவரி 7 ஆம் தேதி நடைபேரணியை அடுத்து மேலூர் பகுதி அம்பலகாரர்கள் 8 பேர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்கத் ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23 தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனை வரவேற்று அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. வெடி வெடித்து, இனிப்புக்களை வழங்கி,ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு. மேலூர் பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று கிராம சுபைக் கூட்டம் நடைபெற்றது. இவற்றில் மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. மேலூர் பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசுக்கும், போராட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இத்திட்டத்தை எதிர்த்து நின்ற மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து குரலெழுப்பிய நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி.

2. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட போராட்டத்தில் பங்காற்றிய கிராம பொதுமக்கள், பெண்கள், உழவர்கள், தொழிலார்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், சூழலியர் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அனைவருக்கும் நன்றி என்ற உள்ளடக்கதை மையமாக வைத்து 2 தீர்மானங்களை நிறைவேற்றுமாறு போராட்ட களத்தில் தொடர்ச்சியாக செயலாற்றி வந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான பரப்புரை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: டங்ஸ்டன் போராட்டம்; 11,608 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றது அரசு!

இதனை கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம்,நரசிங்கம்பட்டி,கல்லம்பட்டி,தெற்குத்தெரு, கீழவளவு, கீழையூர், செம்மணி பட்டி ஆகிய 7 ஊராட்சிகளிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்காம்பட்டி, அட்டப்பட்டி, அய்யாபட்டி, மேலவளவு, சொக்கலிங்கபுரம், பட்டூர், வஞ்சிநகரம், தொந்திலிங்கபுரம், மணப்பச்சேரி உள்ளிட்ட 26 ஊராட்சிகளிலும் இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், மதுரை கிழக்கில் சிட்டம்பட்டி, புது தாமரைப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்த்து சுமார் 35க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மேலூரை புதிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இன்றைய கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 23 இல், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு தமிழ் சார்ந்த கூறுகள் நிறைந்த மதுரை மாவட்டத்தை தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்கவும், டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரியும், டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதனையடுத்து மதுரை மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமசபைகளில் அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் அதை சுட்டிக்காட்டி பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details