தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி: கொட்டும் கனமழை.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு! - Nilgiris STUDENT DROWNS IN RIVER

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாணவன் உடலை இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 12:44 PM IST

மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்
மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி:நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரங்களில் கால் நடை மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள், மற்றும் விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் யாரும் ஆற்றங்கரையில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பிதர்காடு பகுதியில் நேற்று நான்கு மாணவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். பின்னர் நான்கு மாணவர்கள் ஆற்றில் குளித்துள்ளனர். இதில் குணசேகரன் (17) கவியரசன் (17) ஆகிய இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து உடன் இருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இறங்கி குணசேகரனின் உடலை மீட்டனர். ஆனால் கவியரசனின் உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிவிரைவு படையினர் ஆற்றில் இறங்கினர் சுமார் ஆறு மணி நேரமாக கவியரசனின் உடலைத் தேடினார். ஆனாலும் கவியரசனின் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணி தொடர முடியாமல் போனது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று கவியரசனின் உடலைத் தேடும் பணி தொடர்கிறது. இதில் தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிவிரைவு படையினர் ஈடுபட்டு உள்ளனர். ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கும், தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளதால் மாணவனின் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும் போது இரண்டு மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நோட்டு போட்டு லாரி ஓட்டுநர்களிடம் மாமுல் வசூல்.. போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details