தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 10:42 PM IST

ETV Bharat / state

"எங்கள் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.." கண்ணீர்க் கடலில் கருணாபுரம் குழந்தைகள்! - Kallakurichi Illicit Liquor

Kallakurichi Illicit Liquor Victims: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் பகிர்ந்து கொண்ட துக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனை தடை செய்வது உட்பட அரசிடம் வைத்த கோரிக்கைகளின் தொகுப்பை இங்கு காணலாம்..

கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்கள்
கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் விவகாரம், சட்டப்பேரவை வரை ஒலித்தது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். .

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கவலைக்கிடத்தில் இருக்கும் நபரின் நர்சிங் மகள்:அந்த வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருபவரின் மகள் ஹெலன் பிரவீனா கூறும்போது, "கடந்த செவ்வாய் அன்று எனது தந்தை கள்ளச்சாராயம் அருந்தியுள்ளார். ஆனால் அடுத்த நாள் கூலி வேலைக்கு சென்ற இடத்தில் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

அதன் பின்னர், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அப்பாவை காப்பாற்றுவது குறித்து நம்பிக்கை அளிக்கவில்லை. பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலைச் சார்ந்தவர்கள் 24 ஆண்டுகளாக இந்த பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. தற்போது சிறையில் இருக்கும் அவர் மீண்டும் வெளியே வந்து கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டார் என்பது என்ன நிச்சயம்" எனக் கூறினார்.

தகப்பனை இழந்த மகள் வைத்த கோரிக்கைகள்:கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த மதன் என்பவரின் மகள் ஷன்மதி கூறுகையில், "என்னுடைய தந்தை கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்து விட்டார். வாரத்திற்கு ஒருமுறை கூலி வேலைக்கு செல்லும் அவர், அந்த பணத்தில் தினமும் சாராயம் குடிப்பார்.

தாய் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். எங்கள் வீட்டின் வருமானம் என்பது மிகவும் குறைவு. எங்கள் பகுதியின் அருகாமையிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதால் அவர் தினமும் வாங்கி குடிப்பார். இப்பகுதியில் சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும், இந்த நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.

எனது அக்காவின் கல்வி மற்றும் வேலைக்கு உதவி செய்ய வேண்டும், அதேபோல் என்னுடைய தம்பி மற்றும் என்னுடைய கல்விக்கும் உதவி செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை முன்வைத்தார். உயிரிழந்தவரின் மகன் அழகோவியன் கூறுகையில், "என்னுடைய தந்தை கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்துவிட்டார். வீட்டின் செலவுகளை அவர் சரியாக பார்க்க மாட்டார். நான் 11ஆம் வகுப்பு முடித்துள்ளேன், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என் கண்ணீர் மல்க பேசினார்.

ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குழந்தைகள்: கருணாபுரத்தில் இன்னும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். மேலும், சில குழந்தைகள் தாய், தந்தை என இருவரையுமே இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அரசு இனியாவது கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியோடு, ஓயாத அழுகுரலின் மத்தியில் கருணாபுரம் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:"என்னைய பாத்துகிட்டு இருந்த எம்புள்ளையும் இப்போ போயிருச்சு" - கள்ளச்சாராயத்தால் மகனை இழந்து கதறும் தாய்

ABOUT THE AUTHOR

...view details