டாடாவையே கையில் வைத்திருந்த தமிழ்நாடு: டைட்டன் நிறுவனத்தின் கதை!
டாடா (Tata) நிறுவனத்தின் பிரபல கைகடிகார நிறுவனமான டைடன் (Titan) முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டிற்கு சுமார் 27% பங்குண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
டாடா நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டிற்கு ஒரு பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. (Etv Bharat Tamil Nadu)
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா (Ratan Tata) மறைவையடுத்து, தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) தலைவர் பொறுப்பேற்றுள்ளார். பார்சி சமூகம் அல்லாத ஒருவர் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன இது அனைத்து பெரும் நிறுவனங்கள் தமிழர்களை தலைவராக்குகிறது எனும் ஆச்சரிய கதை ஒருபுறம் இருந்தாலும், டாடாவுக்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு தவிர்க்க முடியா பழைய நட்பு இன்னும் தொடர்வது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், டாடாவின் பேஷன் பிராண்டான 'டைட்டன்' (Titan) தமிழ்நாட்டில் தான் முதலில் காலூன்றியது. உலகளவில் பிரபலமான டைட்டன் நிறுவனத்தின் சிறப்பு தரமான கடிகாரங்களுக்குப் பின்னால், தமிழ்நாடு மற்றும் அதன் தொழில்துறை பார்வையின் ஆழமான தொடர்பு உள்ளது.
1980-களின் தொடக்கத்தில், 'தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம்' (TIDCO) மற்றும் டாடா குழுமத்தின் இடையே நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தான், மக்களின் நம்பிக்கைக்குரிய 'டைட்டன் வாட்சஸ் லிமிட்டெட்' நிறுவனம் உருவானது.
தமிழ்நாடு - டிட்கோ, டாடா கூட்டாண்மை:
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய டிட்கோ, 1980-களின் நடுப்பகுதியில், மாநிலத்தின் தொழில்துறை அடிப்படையை வலுப்படுத்த எத்தனித்தது. அதே நேரத்தில், டாடா குழுமம், புதிய துறைகளில் வளர்ச்சி எட்ட விரும்பி, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து வந்தது. இந்தியாவில் கடிகார துறை, பெரும்பாலும் அந்நிய கடிகாரங்களின் கைப்பிடிக்குள் கட்டுப்பட்டிருந்தது.
இதனை மாற்றும் முயற்சியாக டாடா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பொருளாதார வல்லுநர் சோம வள்ளியப்பன் பேசினார். அதில், "1984-ஆம் ஆண்டு டிட்கோ-டாடா இணைந்து டைட்டன் வாட்ச் கம்பெனியை நிறுவியது. அதுவும் நம்ம ஓசூர் என்று சொன்னால் பலரும் வாயடைத்து போவர்!நாடுகள் முழுவதும் 30-க்கும் மேற்பட்டவற்றில் டைட்டன் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. இன்றும் டைட்டன் உலகளாவிய முறையில் தங்கள் பெயரைப் பரப்பி வருகிறது. இப்போதும் சுமார் 27.8% பங்குகளை டிட்கோ தன் வசம் வைத்துள்ளது. இதற்காகக் கொடுக்கப்படும் ஈவுத் தொகையும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் வருவாயாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த மாதம் ராணிபேட்டை மாவட்டத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் மின்சார வாகனங்களுக்கான தொழிற்சாலை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது என்றார். மேலும், டாடா குழுமத்தால் மட்டும் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
டைட்டனின் வளர்ச்சி:
டைட்டன் தன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதா எனக் கேட்டால், இல்லை என்றே சொல்லலாம். பிற அயல்நாட்டு நிறுவனங்களிடத்தில் இருப்பது போன்ற திறன் கொண்ட ஊழியர்கள் டைட்டன் வசம் இல்லாமல் இருந்தது. இதனை சரிசெய்ய, நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ச் செய்யும் முறையைப் பயிற்றுவிக்க விரும்பியது.
இதை பள்ளித் தாளாளர்கள், அரசிடம் தெரிவித்து அவர்களின் விருப்பங்கள் கேட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது. சம்மதம் கிடைத்தவுடன், மாணவர்களுக்கு உணவு, தங்க இடம் அனைத்தையும் கொடுத்து கைகடிகார செய்முறையை அவர்களுக்கு டைட்டன் பயிற்றுவித்தது. உலக தரத்திலான அனைத்து வாட்சுகளையும் அவர்களால் பயிற்சிக்குப் பிறகு உருவாக்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து தான் வெற்றியின் பாதையில் டைட்டன் பயணிக்கத் தொடங்கியது.
தமிழ்நாட்டிற்கு எனத் தனி அடையாளம்:
நிறுவனம் வளர்ந்து வந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘நம்ம தமிழ்நாடு’ (Namma Tamil Nadu) எனும் வாட்ச் சீரிஸை வெளியிட்டது. இதில் பிரத்யேகமாக 'டைட்டன்' என தமிழில் எழுதப்பட்டு, தமிழ் பாரம்பரிய சின்னங்கள் அச்சிடப்பட்டிருந்தது.
டைட்டன் நிறுவனம் ஃபாஸ்டிராக் (Fastrack), சொனாட்டா, ஆக்டேன், சைலஸ், ஹீலியோஸ், டைட்டன் ராகா (Titan Raga), தனிஷ்க், கேரட் லேன், டைட்டன் ஐ பிளஸ், ஸ்கின் (Skinn) போன்ற பிராண்டுகளின் கீழ் தங்கம், வைரம், கடிகாரம், கண்ணாடி, வாசனை திரவியம் உள்ளிட்ட பல பொருள்களை விற்பனை செய்கிறது.
டைட்டன் நிறுவனம் முதல் அதன் துணை மற்றும் இணை நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து தனது தனித்தன்மையை நிலைநாட்டியது. தொடக்கத்தில் சர்வதேச கடிகார நிறுவனங்களுடன் போட்டி கொடுப்பதில் சிரமங்கள் இருந்தாலும், டைட்டன் தனது தரம், ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெற்றி கண்டது. தற்போது உலகின் ஐந்தாவது பெரிய கடிகாரத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
உலக நாடுகள் முழுவதிலும், 30 நாடுகளுக்கு மேற்பட்டவற்றில், டைட்டன் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. இன்றும் டைட்டன் உலகளாவிய பரப்பில் தங்கள் பெயரைப் பரப்பி வருகிறது. டைட்டன் வெறும் தொழிலை மட்டுமே நம்பி களம்கண்டிருந்தால், இந்தளவிற்கு அவர்களால் பிரபலமடைய முடிந்திருக்குமா என்பது சரியாகத் தெரியாது. ஆனால், மக்களுக்கு அருகில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டதால் தான் நிறுவனத்தால் நிலைபெற்று வேகமாக வளர முடிந்தது என வல்லுநர்கள் டாடா நிறுவன புகழ்பாடி வருகின்றனர்.