ராணிப்பேட்டை:வரகூர் புதூர் அடுத்த மேட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் - சித்திரா தம்பதியினர். இவர்களது மகன் பரத் (16). 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அடுக்கம்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.21) இரவு பரத் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனால், பரத்தின் பெற்றோரும், குடும்பத்தினரும் தாமாக முன் வந்து மூளைச்சாவு அடைந்துள்ள தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த பரத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, சிறுவனின் நுரையீரல் வடபழனி காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் அயனம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் போளூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த பரத்தின் உடலுக்கு, அவரது சொந்த ஊரான வரகூர் புதூர் அடுத்த மேட்டுக்குடிசை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (பிப்.22) இறுதி அஞ்சலி நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி பங்கேற்று, தமிழக அரசின் அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்த பரத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!