ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, மீனவர்கள் காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி 2 படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சென்று சிறையில் அடைத்தனர்.
தற்போது, சிறையில் இருந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், அனைவரையும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களிடம் நீதிமன்றம் நடத்திய விசாரணை முடிவில், 20 மீனவர்களை மட்டும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.