புதுக்கோட்டை:திருமயம் அருகே உள்ள கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கு மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டுள்ளது.
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி மரணித்த ஜகபர் அலி, அ.தி.மு.க கட்சியை சார்ந்தவர் ஆவார். பல ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் இவர், அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், புகார் மனுக்கள் அரசு அலுவலகங்களில் இருந்து கசியவிட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஜனவரி 17 வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். ஆனால் வரும் வழியிலேயே, டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி மரியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை, குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.