தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: "அப்போ உங்க தேர்தல் அறிக்கை பொய்யா?"

15,000 பேரை கூட நிரப்ப இடமில்லை என்று அமைச்சர் கயல்விழி கூறும்போது, தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியது வடிகட்டிய பொய்யா? என பாமக வழக்கறிஞர் கே.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 2:45 PM IST

மு.க.ஸ்டாலின், பாமக கே.பாலு
மு.க.ஸ்டாலின், பாமக கே.பாலு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பாமக செய்தித்தொடர்பாளர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-4 லட்சக்கணக்கில் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், அப்பணிக்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-லிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

சமூக நீதியைக் கருத்தில் கொண்டு அவர் விடுத்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருக்கும் இடங்களைத் தானே நிரப்ப முடியும்? ஆளுநரை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் கேள்வி கேட்டாரா? என வினா எழுப்பியுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, இப்படி அறிக்கை வெளியிடும் நிலைக்கு உயர்ந்துள்ள கயல்விழி செல்வராஜ், அதற்காக அன்புமணி ராமதாஸ்க்குத் தான் முதலில் நன்றி கூற வேண்டும்.

பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் கடைசி இடங்கள் தான் வழங்கப்பட வேண்டுமா? முக்கியத் துறைகள் வழங்கப்படாதா? என்று அவர் தொடர்ந்து வினா எழுப்பி, அழுத்தம் கொடுத்ததன் பயனாகத் தான் திமுகவின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக உழைத்து வந்த கயல்விழி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து, இப்போது மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்த உண்மையை அமைச்சர் கயல்விழி செல்வராஜூம் நன்றாக அறிந்திருப்பார்.

மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யா?: குரூப் 4 பணிகளில் 15 ஆயிரம் பேரை நிரப்பும் அளவுக்கு காலியிடங்கள் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். அவர் கூறுவது பொய்யா அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யா? என்பது தெரியவில்லை. அதாவது, 2021ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.

2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறியவாறு மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட காலியிடங்களான 3.5 லட்சத்தில் வெறும் 32,774 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணியிடங்களை காக்கைகள் தூக்கிச் சென்று விட்டனவா? அல்லது தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது வடிகட்டிய பொய்யா?

ஓராண்டு காத்திருந்தது ஏன்?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்ததாகவும், அதை அன்புமணி ராமதாஸ் கண்டிக்கவில்லை என்றும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார். வரலாறு தெரியாவிட்டால் இப்படித் தான் பேச வேண்டி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த கா.பாலச்சந்திரன் 09.06.2022 அன்று ஓய்வு பெற்றார்.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்து நியமித்திருக்க முடியும். ஆனால், தங்களுக்கு சாதகமான ஒருவரைத் தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஓராண்டு காத்திருந்த திமுக அரசு, காவல்துறை தலைவராக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெறும் வரை, ஓராண்டுக்கும் மேல் காத்திருந்து விட்டு, அவரது பெயரை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆளுநர் தாமதித்ததற்கு பெயர் முட்டுக்கட்டை என்றால், திராவிட மாடல் அரசே ஒராண்டுக்கும் மேல் தாமதம் செய்ததற்கு என்ன பெயர்? அமைச்சர் கயல்விழி அவர்கள் விளக்குவாரா?

அரைகுறை விவரம் அமைச்சருக்கு அழகல்ல: தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதற்கான அமைப்புகளில் ஒன்று டிஎன்பிஎஸ்சி. அது முடங்கக்கூடாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. அதனால் தான் அந்த அமைப்புக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு, கயல்விழி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அரைகுறை விவரங்களுடன் அறிக்கை வெளியிடுவது அமைச்சருக்கு அழகல்ல.

சமூக அநீதிக்கு எதிராக பேசாத அமைச்சர் கயல்விழிக்கு, அன்புமணி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கயல்விழி சுட்டிக்காட்டிய அனைத்து நிகழ்வுகளையும் பாமக கண்டித்திருக்கிறது. அதற்கும் மேலாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளையும் கண்டித்தார்கள்.

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் குறை கூறுவதா?: திமுக தான் வாய்மூடி மவுனியாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்நிலைக்குழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்(485) என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததே, அதை செய்யாமல் திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பது ஏன்?

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களிடம் கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமான இருக்கும் போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ் மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது.

அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுக தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details