தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்த மழைக்கே சென்னை தாங்கலையே" - ராமதாஸ் சொன்ன ஆலோசனை

சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Ramadass Allegations Against tn govt
ராமதாஸ், தேங்கியுள்ள மழைநீர், ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட தமிழக மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில், மழை விட்டதும் பின் அவை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை மாநகரின் முதன்மைச் சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது.

இதையும் படிங்க:"கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகள்.. இதுதான் திராவிட மாடல் சேவையா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அதே நேரத்தில் மழைநீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன. திருப்புகழ் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தவாறு மழைநீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தால் சென்னையில் எந்தப் பகுதியிலும் மழைநீர் தேங்காமல் தடுத்திருக்க முடியும். சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது.

இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால், அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details