தமிழ்நாடு

tamil nadu

மகளிர் கல்லூரிக்கு எதிரே டாஸ்மாக் மதுபான கடை..அகற்ற கோரி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு! - Kumbakonam tasmac

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 7:55 PM IST

கும்பகோணத்தில் மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி அதே பகுதியில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோட்டாட்சியரிடம் மனு அளித்த பகுதி மக்கள்
கோட்டாட்சியரிடம் மனு அளித்த பகுதி மக்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், இந்த பிரச்சனையில் விரைந்து நல்ல முடிவு எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பொது மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் 23வது வட்டம் மாமன்ற உறுப்பினர் பிரதீபா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து, கோட்டாட்சியரிடம் மனு அளித்த கும்பகோணம் மாநகர் 23வது வட்டம் மாமன்ற உறுப்பினர் பிரதீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ கும்பகோணம் மாநகர் 23வது வட்டம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜான் செல்வராஜ் நகரின் வழியாக பெரும்பான்மை பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்கிறது. கும்பகோணம் மாநகரில் மொத்தமுள்ள 8 அரசு மதுபான கடைகளில், 4 இதே நகரில் ஒரே வீதியில் அமைந்துள்ளது.

இதனை அகற்றிட கோரி கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவு வாயிலுக்கு எதிரே இந்த 4 கடைகளில் ஒன்று இயங்கி வருகிறது.

இதையும் படிங்க:பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!

எனவே, இதனை மாற்றி அதே வீதியில் மற்றொரு கட்டிடத்தில் மாற்றிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உத்தேசிக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே ஐஏஎஸ் தனியார் பயிற்சி மையம், செவிலியர் பயிற்சி கல்லூரி, பள்ளிவாசல், தங்கும் விடுதி, எதிரே மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளது.

ஏற்கனவே 4 கடைகளையும் இங்கிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என போராடி வரும் நிலையில், இங்குள்ள கடையை மீண்டும் இதே பகுதியில் மாற்றும் நடவடிக்கையினை கைவிட்டு, அதற்கு பதிலாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேறு பகுதிக்கு கடையினை மாற்றிட வேண்டும் என வலியுறுத்தி, இன்று கும்பகோணம் கோட்டாட்சியர் ஹிருத்யா எஸ் விஜயனிடம் இப்பகுதி மக்கள், வணிகர்கள், மாமன்ற தனித்தனியாக கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

அரசு இந்த பிரச்சனையில் விரைந்து நல்ல முடிவு எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பொது மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details