தமிழ்நாடு

tamil nadu

"குத்தகைதாரர் வசமுள்ள ரூ.100 கோடி நிலத்தை மீட்பேன்!" அதிமுக கவுன்சிலர் சபதம்! - Nerkundram land councillor Protest

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 10:02 PM IST

Nerkundram Land Councillor Protest: நெற்குன்றம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் குத்தகைதாரர்கள் வசம் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதை நான் மீட்பேன் என 145வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் கூறியுள்ளார்.

அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன்
அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை நெற்குன்றம் 145வது வார்டு என்.டி.பட்டேல் சாலையில் உள்ள ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 14 செண்ட் அரசு நிலத்தை மீட்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த போரட்டத்தை 145 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் ‘நெற்குன்றம் மண் நெற்குன்றம் மக்களுக்கே’ என்ற தலைப்பில் நடைபெற்றது.

அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது தனியார் வசமுள்ள அந்த இடத்தை மீட்டு அங்கு அரசு சார்பில் சமூக நலக்கூடமும், மகளிர் சுய தொழில் கட்டமும் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்படது.

அப்போது அங்கு வந்த போலீசார் இந்த இடத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் சத்யநாதன் கூறுகையில், "1962ஆம் ஆண்டு நெற்குன்றம் பகுதியில் உள்ள 1.14 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் கட்டுவதற்காக அந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்தவித கட்டிடமும் கட்டப்படவில்லை. ஒருவேளை கட்டப்பட்டிருந்தால் குத்தகை முடிந்த பின்னர் இடத்தை மீட்கும் போது கட்டப்பட்ட கட்டிடத்திற்காக இழப்பீடு கொடுத்து இடத்தை மீட்டுக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அண்ணா பிறந்தநாளில் எஸ்.பி.வேலுமணி போட்ட சபதம் என்ன தெரியுமா?

இது தொடர்பான தகவல்களுடன் கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த பா.பெஞ்சமின் மற்றும் நான் தெரிவித்தோம். அதன் பிறகு சட்டப்படி இடத்தை மீட்டேன். இந்த நிலையில் மீண்டும் அந்த இடம் குத்தகைதாரர்கள் வசம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இதற்காக அரசு தரப்பில் வாதாட வேண்டிய வட்டாட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் உரிய முறையில் நீதிமன்றத்தில் வாதிடவில்லை. அந்த இடத்தை மீட்டால் அங்கு மக்களுக்கு ஒரு சமுதாய நலக்கூடமோ அல்லது மகளிர் தொழில் செய்வதற்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

ஆனால் சென்னை மாநகராட்சியில் ராஜரத்தினம் அரங்கம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டத்தை கைவிட்டு உள்ளோம். ஆனால் போலீசாரின் உரிய அனுமதி பெற்று நெற்குன்றம் மக்களின் இந்த நிலத்தை நெற்குன்ற மக்களுக்காக நான் மீட்பேன்" என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details