தூத்துக்குடி:தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாம் இந்தியர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் என்.பி.ராஜா தலைமையில், தூத்துக்குடியில் உள்ள விவிடி சிக்னல் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் என்.பி.ராஜா பேசுகையில், "மத்திய அரசுக்கு கேஸ்(சமையல் எரிவாயு உருளை) என்பது மிகப்பெரிய பிசினஸ் ஆக உள்ளது. மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகிக்கிறார்கள். இதனால் நமக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் 547 எம்பிக்களில் நீங்கள் வெறும் 39 எம்பி இருக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.சமூக நீதி மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டுச் செல்ல வேண்டியது தான். மோட்டார் வாகனச் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இதை எதிர்த்து 39 எம்பிக்களில் ஒருவராவது ராஜினாமா செய்தனரா? என விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர்கள் மீது விமர்சனம்:மேலும், மண் பானை தொழிலாளர்கள் ஒரு சட்டி செய்ய மண் எடுக்க முடியவில்லை, ஆனால் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ஒரு யூனிட்டுக்கு 250 ரூபாய் கொடுத்தால் லாரி லாரியாக மணல் எடுத்துச்செல்லலாம் என்ற நிலை உள்ளது. தமிழக மக்களின் வயிற்றெரிச்சலால் தான் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார், மின் கட்டணத்தை அந்த அளவிற்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்தவர் செந்தில் பாலாஜி என திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.