சென்னை: நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உயர்கல்வியில் விளிம்பு நிலை மக்களின் நிலை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அதில் பேசிய திருமாவளவன், “விளிம்பு நிலை சமூகம் அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு அனைவருக்குமான கல்வி கொள்கையை வரையறுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஜனநாயக கடமையாக மாறி உள்ளது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே புகழ் பெற்று விளங்கியது நாளந்தா பல்கலைகழகம்.
அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும், அனைவரும் சமமாக உயர்த்தப்பட வேண்டும் என்கிற எண்ணம் புத்த மதத்தில் இருந்தது. இந்தியாவில் இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லும் கோட்பாடு, மற்றொன்று குறிப்பிட்ட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் பெரும்பான்மையானவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதை உணர்த்தியவர்கள் ஆங்கிலேயர்கள் தான். நம்மை ஆண்டார்கள் அடிமைபடுத்தினார்கள் என்கிற விமர்சனம் இருந்தாலும் கூட கல்வி, மருத்துவத்தை பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைக்கும்படி ஆங்கிலேயர்கள் பார்த்தார்கள். புதிய கல்வி கொள்கை கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, விளிம்பு நிலை மக்கள் கல்வி கற்கும் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி. பள்ளிக் கல்வியில் ஒருவரை நிறுத்தி விட்டால் உயர்நிலை கல்விக்கு வர முடியாது, அப்படி வர முடியவில்லை என்றால் அவர்கள் முடிவுவெடுக்கும் இடத்திற்கு வர முடியாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சூழ்ச்சி தான் இது.
உயர்கல்வி என்பது தான் உண்மையில் கல்வி, பள்ளி கல்வி ஒரு அடிப்படை கல்வி. அது மட்டுமே கல்வி அல்ல, அதை வைத்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. பிரதமராக இருக்கும் வாய்ப்பு மக்கள் கொடுத்தாலும், தேவையான சட்டத்தை அவரால் வரையறுக்க முடியாது. அதற்கான தகுதியை கல்வி தான் தரும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எல்லாம் தரம் உயர வேண்டுமானால் அவர்களுக்கு உயர்கல்வி தேவை.
யாரும் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம், அதை யாரும் தடுக்க முடியாது. ஹிந்தியை படிக்க விரும்பும் மக்கள் ஹிந்தியை படிக்கலாம். ஒரு அரசு கல்வி பாடங்களில் ஒற்றை மொழியை திணிக்க முயற்சிப்பது தான் நாம் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை வகுக்கும் போது அதனை அனைவருக்குமானதாக கட்டமைக்க வேண்டும். விளிம்புநிலைச் சமூகம், Empower ஆக வேண்டுமானால், வலிமை பெற வேண்டுமானால் உயர்கல்வி அவசியம்.
விளிம்புநிலைச் சமூகத்தின் கல்வியின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு தேசத்தின் பயிற்று மொழியாக, ஒரே மொழியை திணிக்கக் கூடாது. ஒரே தேசம், ஒரே மொழி என்கிற திணிப்பை தான் எதிர்க்கிறோம். எந்த மொழியையும் எதிர்க்க வேண்டாம். எந்த மொழியையும் நான் பழிக்கவில்லை. ஒரே மொழி, ஒரே தேசம் என்பதை நாம் எதிர்க்கிறோம். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணம் இல்லை என்று அறிவிக்கும் அரசு தான் மக்களை உயர்த்தும், மேம்படுத்தும் அரசாக இருக்க முடியும்.
கல்வி கட்டணம் இல்லாமல் வந்தால் அந்த நாடு உலக அளவில் மிக உயர்ந்த தேசமாக இருக்கும். இந்த சதித்திட்டங்களை முறியடிக்கும் முயற்சியில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி விடுவிக்கப்படாமல் இருப்பது அந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்களில் நிதி பற்றாக்குறை பிரச்சனை உள்ளது. சிறுபான்மை சமூக பிரிவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு நிதி சிக்கல்கள் இருப்பது உண்மை. பல பல்கலைக்கழகங்களில் நிதி இல்லை என்கிற புலம்பலை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.
விளிம்பு நிலை சமூகங்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்கிற நிலைப்பாடு எட்டாக்கனியாகவே உள்ளது. விளிம்புநிலைச் சமூகத்தின் கல்வியின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு தேசத்தின் பயிற்று மொழியாக, ஒரே மொழியை திணிக்க கூடாது. ஒரே தேசம், ஒரே மொழி என்கிற திணிப்பைதான் எதிர்க்கிறோம். எந்த மொழியையும் எதிர்க்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.