தமிழ்நாடு

tamil nadu

"வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை தவறிவிட்டார் மாரி செல்வராஜ்".. ஜவாஹிருல்லா கருத்து! - jawahirullah

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 6:42 PM IST

Vaazhai Movie: வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குநர் மாரிசெல்வராஜ் தவற விட்டுவிட்டார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் மற்றும் ஜவாஹிருல்லா புகைப்படம்
மாரி செல்வராஜ் மற்றும் ஜவாஹிருல்லா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி:பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா திருநெல்வேலிக்கு வந்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி என்று சொல்லக்கூடிய பக்கவாட்டு அனுமதியின் மூலம் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசுத் துறைகளில் எல்லா தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிறந்த இயக்குநரான மாரி செல்வராஜ், சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.

தென் மாவட்டங்களில் தேவையான சாதிய நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தீய நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி மட்டுமின்றி, பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் காரணமாகவே, இப்போது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை நாங்கள் தெரிவிப்போம்.

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அங்குள்ள மக்கள் அது பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி அதை விட்டுவிட வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும்.

திருநெல்வேலி - நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் ரயில்கள் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். பாலியல் வன்முறை கவலைக்குரியதாக உள்ளது.

இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டுமின்றி, ஆசிரியர், பெற்றோர், ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர். பாலியல் குற்ற வழக்குகளை ஒரு மாதத்திற்குள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது போல கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களையும் அரசு வலிமையாக எடுக்க வேண்டும். அதுதான் மதச்சார்பற்ற அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பாடநூல்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசியிருக்கிறார்.

பாட நூல்களில் அனைத்து மதம் சார்ந்த விஷயங்களையும் சேர்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மனித நேய மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில், வரும் 22ஆம் தேதி முக்கிய நகரங்களில் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார அணிவகுப்பு நடைபெற உள்ளது. அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ,நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

இதையும் படிங்க:மருத்துவ மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; தலைமறைவான அரசு மருத்துவரை தேடும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details