தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள் - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Chief Minister M.K.Stalin: நாடாளுமன்றத் தேர்தல்தானே என்று மெத்தனமாக இருந்தால் விளைவுகள் மோசமாகும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Chief Minister M K Stalin warning to administrators in dmk district secretaries meeting
மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 2:28 PM IST

Updated : Feb 23, 2024, 3:01 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சற்று கடுமையாகவே நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என கூட்டத்தில் ஸ்டாலின் பேசினாலும், கள நிலவரங்கள் சில வார்னிங் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சவால் அளிக்கக் கூடிய தொகுதிகள் அல்லது, பறிபோக வாய்ப்புள்ள தொகுதிகள் என குறைந்த பட்சம் 6 தொகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கொங்கு மற்றும் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகள் நெல்லையில் உள்ள குழப்பம் என, கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை திமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இதை உளவுத்துறை மூலமாகவும் உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தலைமைக் கழகம் கடுமை காட்டத் தொடங்கியிருக்கிறது.

சென்னையிலிருந்து இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றார் மு.க.ஸ்டாலின். இக்கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திருப்தியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் பணிகள் மந்தமாக இருக்கிறது. சரியாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தான் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் பிரதிபலிப்பை வைத்தே கட்சித் தலைமை செயல்படும், நடவடிக்கையும் எடுக்கும். தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். சரியாக செயல்படாதவர்கள் மீது கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

அமைச்சர்கள், நாடாளுமன்றத் தேர்தல்தானே என்று மெத்தனமாக இருந்து விடாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பொறுப்பு அமைச்சராக உள்ள இடங்களில் தொடர்ந்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொகுதி பொறுப்பாளர்களுக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐடி துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Last Updated : Feb 23, 2024, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details