சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் ஊடக நிறுவனமாக விகடன் நிறுவனம், அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இணைத்து விமர்சிக்கும் விதமாக சித்தரித்து, அட்டைப்படத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.
அந்த வகையில், பிப்ரவரி 10ஆம் தேதி விகடன் பிளஸ் இணைய இதழில் வெளியான பிரதமர் மோடி கார்ட்டூன் படத்தால் மத்திய அரசு விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விகடன் குழுமமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளன.
பாஜகவின் பாசிசத் தன்மை:
இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இதழியலில் நூறாண்டுக் காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.கவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!