தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ராஜேந்திரன்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ராஜேந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்:சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழையொட்டி, சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில்," சேலம் மாநகராட்சியின் முக்கிய நீர்நிலைகளாகக் கருதப்படும் மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, பள்ளப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டத்தினை தொடர்புடைய துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் அலுவலர்களால் தொடர் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்தி வேண்டுமெனவும், மேலும், தேவைப்படும் நேரங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பதையும், நீர் நிலைகளில் ஆழமான பகுதிகளின் அருகில் எச்சரிக்கை பலகைகளை வைத்திருப்பதையும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடுகள், சுகாதாரமான குடிநீர் வழங்கிடுவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமெனவும், மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டதை உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறையினர் குடிநீர் ஆதாரங்களில் முறையாக குளோரின் சேர்க்கப்பட வேண்டும். மேற்படி பணிகளை கண்காணிக்க குளோரினேசன் குழுக்கள் அமைத்திடவும், அதேபோன்று, வடகிழக்கு பருவமழையையொட்டி மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படுவதை பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:சேலம்: கொட்டித் தீர்த்த மழையால் ஆயிரம் வீடுகளுக்குள் வெள்ளம்.. போக்குவரத்து தடையால் பொதுமக்கள் திணறல்!

தொடர்ந்து பேசிய அவர்,"அனைத்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 x 7 மணி நேரமும் உரிய பணியாளர்களுடன் இயங்கிடவும், பருவமழை தகவல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்பிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால நிகழ்வுகளை கருத்திற்கொண்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு, ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்கவைக்க கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் உள்ளதை வருவாய்த்துறை உள்ளிட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:மேலும், மீட்பு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் “1077” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.120-இல் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது " என தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details