தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்! - Chennai Air Show Death Issue

விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது எனவும், கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை வெயிலின் தாக்கத்தினால் தான் 5 பேர் இறந்தனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் காலநிலை மாற்றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கிற்கான மலரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. விமானப்படை சாகசத்தின்போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம். இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் இறக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் நேற்று 102 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், கால் முறிவு, மூச்சுத் திணறல், குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

பொது மக்களுக்கு தேவையான அனைத்தை வசதிகளையும் அரசு செய்திருந்தது. மெரினாவுக்கே வராமல், பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள்தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்ப நிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப்படைதான் முடிவு செய்திருந்தது. விமானப்படையை குறைகூற முடியாது. வெயிலின் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை.

இறந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 15 லட்சம் பேர் கூடினாலும் சிறிய நெரிசல் கூட ஏற்படவில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 5 பேர் இறந்ததற்கு வெயில்தான் காரணம் கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "இந்திய விமானப்படை தனது பலத்தை காட்டுவதற்கு சென்னையை தேர்வு செய்ததும், தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து விமானப்படையினர் கேட்ட அனைத்து வசதியையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது.

இதையும் படிங்க:"விமான சாகசத்தைக் காண வந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

இந்திய ராணுவத்தின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் பல்வேறு மருத்துவக் குழுக்கள் மெரினாவில் இருந்தனர். அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் மெரினாவில் தயார் நிலையில் இருந்தன. ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர்.

அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு விமானப்படை கூறியிருந்தது. அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஆகியவற்றில் படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன. மேலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை மற்றும் தண்ணீர் எடுத்து வருமாறும் , கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்து வருமாறும் விமானப்படை கூறியிருந்தது" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details