தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கையால் 'வெள்ளச்சேரி' வேளச்சேரியாக மாறிவிட்டது" - அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்!

சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

அமைச்சர் கே என் நேரு
அமைச்சர் கே என் நேரு (Credits - Greater Chennai Corporation X Page)

சென்னை :சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும், வடிகால் சீரமைப்பு பணிகள் குறித்தும் ரிப்பன் மாளிகையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "மாநகராட்சி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்று 17 முதல் 20 செ.மீ வரை மழை பெய்தும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றபட்டு உள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, அனைத்து சுரங்கப்பாதைகளும் சீரான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வெறும் 400 கி.மீ தான் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,135 கி.மீ கட்ட திட்டமிடப்பட்டு, 781 கி.மீ வரை முடிந்துள்ளன. 2ம் கட்டப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க :சென்னைக்கு தொடரும் ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தற்போது 400 டிராக்டர் பம்புகள் கொண்டு வரப்பட்டு, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. போதிய நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவ பொருட்கள் தயார் நிலையில் இருக்கின்றது. நேற்று மட்டும் நான்கரை லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து 65,000 பேர் பயனடைந்துள்ளனர். தற்போது மழைநீர் வேகமாக வடிந்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வேளச்சேரியில் எங்கும் வெள்ள நீர் தேங்காத அளவு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆண்டுகாலத்தில் செய்த பணிகளை அறிக்கையாக அளித்து இருக்கிறோம். குறிப்பாக, வடசென்னை தனிகாசலம் - கால்வாய் சீரமைக்கும் பணி 10 சதவிகிதம் மட்டுமே மீதம் உள்ளது. ரூ.1000 கோடி செலவில் வடசென்னை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை நிறைவடைந்த பிறகு வடசென்னையில் வெள்ளம் ஏற்படாத சூழல் நிலவும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details