சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், டெண்டர் நியாமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பு ஆணை செப்.13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார். டெண்டரை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கு அதிகாரம் உள்ளது” இவ்வாறு டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது போன்ற சில நிபந்தனைகளை நீக்கி விட்டு, அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையில் தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.