தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட் விவகாரம்; மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டம்! - budget issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 7:13 PM IST

Updated : Jul 28, 2024, 7:59 PM IST

Su Venkatesan: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை மாபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லை.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

நாற்காலிக்கான பட்ஜெட்டாக, ஆந்திரா, பீகாருக்கு மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. பீகாரில் உள்ள கோசி நதியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 21,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு நிதி ஒதுக்கவில்லை. அந்நிய மூலதனத்திற்கான வரிக் குறைப்பு தேசத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். மாநிலங்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியது. இந்த நிமிடம் வரை ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புக் வெளியிடப்படவில்லை. ஆவணத்தை தராமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரயில்வே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளன.

ஆகையால், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரயில் மறியல் நடத்தப்பட உள்ளது. இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றம் ஒரு போராட்டக் களமாக உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி உள்ளன. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பெண் என்பதால் இன்ஜினியரிங் படிக்க மறுப்பு.. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நெகிழ்ச்சி பதிவு! - Aditya L1 director Nigar Shaji

Last Updated : Jul 28, 2024, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details