கோயம்புத்தூர்:இவ்வழக்கு தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு எண்,CRNO.125/24- ன்படி, மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், நகைகள் சரிபார்ப்புப் பணி கோவை இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோயிலின் அறங்காவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, திருக்கோயிலில் உள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருதமலை கோயிலின் உபகோயிலான கரி வரதராஜ பெருமாள் கோயிலின் தினக் கூலி அர்ச்சகரான ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும், 14 கிராம் எடையுள்ள 7 பவுன் தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூலைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த நகைகள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த அர்ச்சகரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில், தான் தான் கோயில் நகைகளைத் திருடி, போலி நகையை மாற்றி வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து, அறங்காவலர்கள் குழு மற்றும் கோயில் நிர்வாகிகள் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டார். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் IPC 408 (நம்பிக்கை மோசடி) ,420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.