தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 கிடாய்கள் வெட்டி கறி விருந்து.. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில், 'புரட்டாசி கொடை விழா' வெகுவிமர்சையாக நடைபெற்றது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா
மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில். சொத்துப் பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் என வேண்டுதல்கள் நிறைவேற மாடசாமியை மனமுருக வேண்டிக் கொண்டு ரோஜா மாலையைச் சாற்றி, பன்னீர் தெளித்து கற்பூரம் ஏற்றி பித்தளை மணியை மரத்தில் கட்டி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

அதன்படி, இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மணிகளைக் கட்டி வழிபட்டு வருகின்றனர்.அதே போல் மாடசாமிக்கு உடைக்கப்படும் தேங்காய், பழம் எதுவும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. தேங்காயையும், வாழைப் பழத்தையும் கோயிலின் ஒரு பகுதியில் தனித்தனியாக குவித்து வைக்கப்படுகிறது.

மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamilnadu)

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காயை சிறு, சிறு துண்டுகளாக உடைத்து உண்ணுகிறார்கள். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமையும் பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டால் மாடசாமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நிலம், வீடு வாங்குதல், திருமணம் ஆகியவற்றிற்கு மாடசாமியிடம் பூ கட்டிப் போட்டு பார்த்து அனுமதி கிடைத்தால் மட்டுமே அந்த காரியத்தில் இறங்குகிறார்கள் பக்தர்கள்.

மணிக்கட்டி மாடசாமி கோயில் நுழைவு வாயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

புரட்டாசி கொடை விழா:இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் கொடை உற்சவத் திருவிழாதான் இங்கு முக்கியமான விழா.இந்த விழா அன்று உச்சிக்கால பூஜைக்கு மட்டுமே பெண்களுக்கு அனுமதி உண்டு.

மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது. மறுநாள் நடைபெறும் படைப்பு பிரசாதத்தையும் ஆண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டிற்கும் எடுத்துச் செல்லக்கூடாதாம். பூஜை, கொடை விழாவில் மேளம் எதுவும் கிடையாது. மணிச்சத்தில் மட்டுமே பூஜை நடைபெறுகிறது.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாடசாமிக்கு ஆடு, சேவல்களைக் காணிக்கையாக கோயிலில் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு நேர்த்திக்கடனுக்காக விடப்படும் ஆடு, கோழிகள் ஊருக்குள் சுற்றித் திரிந்தாலும் மாலையில் கோயில் எல்லைக்குள் வந்து சேர்ந்துவிடுகிறது என்றும் மாடசாமியின் நேர்த்திக்கடன் என்பதால் யாரும் அவற்றை சீண்டுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் கட்டிய பித்தளை மணிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கொடை விழா:இந்தாண்டு கொடை விழா நேற்று (அக்.10) தொடங்கியது. கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ மணிகட்டி மாடசாமிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாம கொடை பூஜை நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைபெற்றது.

இதையும் படிங்க:குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்.. விரத முறைகளும் வேடங்களின் பலன்களும்!

கிடா விருந்து:இதனைத் தொடர்ந்து சுவாமிக்கான படைப்பு பிரசாதம் பக்தர்களுக்கு நேற்று(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் வெட்டப்பட்டு, சமைத்து பிரம்மாண்ட முறையில் சமபந்தி கிடா விருந்து நடைபெற்றது.

பக்தர்களுக்கு தயார் செய்யப்பட்ட கிடா விருந்து (Credits - ETV Bharat Tamil Nadu)

கிடா விருந்தில் பெண்கள் பங்கேற்கக் கூடாது என்பதால், ஆண்கள், சிறுவர்கள் மட்டுமே நீண்ட வரிசையில் நின்று கிடா விருந்து அருந்தினர். இந்த விருந்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் எவ்வளவு வேண்டுமானாலும் கறி விருந்து சாப்பிடலாம். ஆனால் மதுபோதையில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.இது குறித்து கோயிலில் பணியாற்றும் பூசாரிகள் கூறுகையில்,"கோயிலில் மணிகட்டி மாடசாமி அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.

அவர் திருமணம் ஆகாதவர் என்பதால் கோயிலில் 6 மணிக்கு மேல் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து இந்த புரட்டாசி கொடை விழாவைக் கொண்டாடி வருகின்றோம். அதனால் தான் இந்த கோயிலின் புகழ் மேலும் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது" என தெரிவித்தார்.

பக்தர்களுக்கு பரிமாறப்பட்ட கிடா விருந்து (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயில் திருவிழா என்றாலே பொங்கல் வைப்பது, முளைப்பாரி எடுப்பது என பெண்கள்தான் அமர்க்களப்படுத்துவார்கள். ஆனால், டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ மணிக்கட்டி மாடசாமி கோயில் 'கிடா கறி விருந்து' திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது சற்று வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details