தமிழ்நாடு

tamil nadu

தனியார் பல்கலை முன் குவிந்த 1,000 போலீசார்.. இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்.. சிக்கிய முக்கியப்புள்ளி! - Chengalpattu Drugs Supplying Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 3:00 PM IST

Man Arrested For Drugs Supplying In Chengalpattu: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விநியோகம் செய்து வந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள செல்வமணி
கைது செய்யப்பட்டுள்ள செல்வமணி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகார் குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன் அடிப்படையில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், தாம்பரம், பள்ளிக்கரணை துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றி அமைந்துள்ள 500க்கும் மேற்பட்ட விடுதிகள், வீடுகளில் இன்று (ஆக.31) காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 19 மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து அரை கிலோ கஞ்சா, 6 போதை சாக்லேட், 20 மில்லி கஞ்சா எண்ணெய், 5 பாங், ஒரு புகை பிடிக்கும் பானை, 7 ஹூக்கா, 6 ஹூக்கா தூள் ஆகியவை பறிமுதல் செய்து தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பிடிபட்ட மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான செல்வமணி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா, நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட செல்வமணியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், சம்பந்தப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:துபாயில் இருந்து தங்கம் கடத்தல்.. 4 மாதமாக அறையில் சித்ரவதை ஏன்? - சினிமாவை விஞ்சிய பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details