தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழலை பாதுகாக்க களத்தில் இறங்கிய மதுரை காமராசர் பல்கலை காட்சித் தொடர்பியல் துறையினர்! - சுற்றுச்சூழல் பாதுகாப்பு

Madurai VISCOM Students: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம் வாலிப்பாறையில் உள்ள மூல வைகையாற்றில் பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தி ஊடகத்துறையில் பயிலும் மாணவ, மாணவியர் முழக்கம் எழுப்பினர்.

Students created awareness
பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 7:16 PM IST

பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் காட்சித் தொடர்பியல் துறை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து 'இலக்க முறையிலான ஊடக சூழல் விழிப்பறிவு மற்றும் நீடித்த வள அறிவியல் தகவல் தொடர்புக்கான கல்வியாளர்கள் உருவாக்கம்' என்ற தலைப்பிலான 5 நாள் தேசியப் பயிலரங்கம் நடந்தது. இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, தென் மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் வைகை ஆற்றின் பிறப்பிடமான தேனி மாவட்டம் வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை பகுதிக்கு, அம்மாணவர்கள் கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சூழலியல் செயற்பாட்டாளர்களின் அறிவுறுத்துதலோடு, நேரடியாக வைகை உற்பத்தியாகும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அதன் நிலை குறித்து அறிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ள வாலிப்பாறை மூல வைகையாற்றில் நிலவும் பல்வேறு தூய்மைக்கேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களைச் சந்தித்தும் உரையாடினர். பிறகு வைகையாற்றில் இறங்கி தாங்கள் கொண்டு வந்த விழிப்புணர்வுப் பதாகையுடன் இறங்கி, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து முழக்கம் எழுப்பி, அதற்கான பணிகளில் தங்களின் பங்களிப்பையும் உறுதி செய்தனர்.

இது குறித்து 2-ஆம் ஆண்டு காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவி அனிதா கூறுகையில், “இந்தப் பயிலரங்கின் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வெறும் தொடர்பியல் படிப்பாக மட்டுமின்றி, சூழலியலைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது நாங்கள் வந்துள்ள இந்த வாலிப்பாறை பகுதியைப் பார்வையிடும்போதுதான் தெரிகிறது, இயற்கையைப் பேணி பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவமானது என்பது.இதற்கான பொறுப்பும், கடமையும் கூடுதலாக எங்களுக்கு இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது' என்றார்.

அதே துறையில் பயிலும் கோகுல் கூறுகையில், 'இயற்கையைப் பாதுகாப்பதன் மூலமான நன்மையையும், அதை அழிப்பதன் விளைவாக ஏற்படும் தீமையையும் எங்களால் உணர முடிந்தது. இயற்கையைப் பாதுகாப்போம் என்று ஒருவர் பேச நாங்களெல்லாம் கேட்பது போன்று அல்லாமல், அந்த இடத்திற்கேச் சென்று அதை உணர்ந்து, அதன் எதார்த்தத்தை உள்வாங்கிக் கொள்வது என்பது முக்கியமானது. எந்த அளவிற்கு இயற்கையைவி ட்டு நாம் ஒதுங்கிவிட்டோம் என்பதை முழுவதுமாக உணர முடிந்தது' என்றார்.

காட்சித் தொடர்பியல் துறைத் தலைவரும், பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் நாகரத்தினம் கூறுகையில், “வைகை உருவாகும் வெள்ளிமலைப் பகுதியை மாணவர்கள் நேரடியாக ஆய்வு செய்ததன் மூலம், தாங்கள் வல்லுநர்களின் வாயிலாக அறிந்தவற்றை நேரடியாக கண்டுணரும் வாய்ப்பாக இந்த களப்பார்வை அமைந்துள்ளது.

வைகையாற்றின் தண்ணீர் இங்கு கண்ணாடிபோல் மிகத் தூய்மையாக இருப்பதைக் கண்டு, மாணவர்கள் மிகவும் வியப்படைந்தனர். இப்பயிலரங்கில், சூழலியல் சார்ந்து பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் பலர் வந்து உரையாற்ற உள்ளனர். அதனோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள இந்த கள ஆய்வு மிகவும் பயன்படும். ஊடகத்துறை சார்ந்த மாணவர்களுக்கு முதல் தரமான பயிற்சிக்களமாக இந்த பயிலரங்கு அமைந்துள்ளது' என்றார்.

இதனையடுத்து தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த விழிப்புணர்வுப் பதாகைகளைக் கையில் ஏந்தி, மூல வைகையாற்றின் நடுவே நின்றவாறு, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காத்தல், சுற்றுச்சூழலின் அவசியம், நெகிழிப் புறக்கணிப்பு போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:ரைடர் ஷர்மிளா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு; என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details