மதுரை: கடந்த வெள்ளிக்கிழமை காலை சென்னை - செங்கோட்டை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் கடத்தியதாக, சென்னை கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவரை மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக மதுரை யூனிட் அதிகாரிகள் (Directorate of Revenue Intelligence) மதுரை ரயில் நிலையத்தில் பிடித்தனர்.
அவரிடம் இருந்த இரண்டு பேக்குகளை சோதனை செய்ததில், 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்புபடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிள்ளமன் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் தனது வீட்டில் 6 கிலோ மெத்தப்பெட்டமைன் உள்ளதாகவும், தன்னை தொடர்புகொள்ள முடியாவிட்டால் அவற்றை குப்பையில் போட்டுவிட வேண்டும் என தனது மனைவி மோனிஷா ஷீலாவிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிள்ளமன் பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே பிரகாஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.