தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடையா? நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

Madurai Medical College: மதுரை மருத்துவ கல்லூரியை தேர்தல் மையமாக பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்து வரும் பிப்.12ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 10:59 PM IST

பிப்.12 க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடை விதிக்கக்கோரிய மனு

மதுரை:மதுரை மருத்துவக் கல்லூரி தேர்தல் மையமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கு அது இடையூறாக இருப்பதால் தேர்தல் பணிகளை வேறு மையத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று (பிப்.08) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்து வரும் பிப்.12 ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக ராஜா முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "மதுரை மருத்துவக் கல்லூரி மிகவும் பிரபலமான கல்லூரி. இங்கு சுமார் 4000க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் போது மதுரை மருத்துவக் கல்லூரி முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதோடு, 3 மாதங்களுக்கு முன்பாகவே கல்லூரி தேர்தல் ஆணையத்தால் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதோடு, பதிவான வாக்குகள் மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதோடு, காவல்துறை மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிகள் எதற்காகவும் பயன்படுத்த கூடாது எனவும், தேர்தல் பணிகளை வேறு மையத்திற்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மதுரை மருத்துவக் கல்லூரியை தவிர்த்து, வேறு கலை அறிவியல் மாற்று இடத்தை தேர்வு செய்ய முடியுமா என்பது குறித்து பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்ரவிட்டனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய முடியுமா என்பதை கண்டறிய கால அவகாசம் தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் தொடர்பான இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்" என வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் மையமாக பயன்படுத்துவது குறித்தும், மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்தும் வரும் பிப்.12 ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தலைமை நீதிபதியிடம் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள்.. தனி நீதிபதி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details