மதுரை:மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பார்ப்பதற்காகச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதோடு வலுக்கட்டாயமாக ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பிபிடிசி நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "534 பேர் முன்கூட்டியே ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஏற்கனவே 25 சதவீதம் தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள தொகை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறையின் உதவி இயக்குநர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது" எனக் கூறினர்.