தமிழ்நாடு

tamil nadu

மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதி; டான்ஜெட்கோ மீதான தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு ரத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 10:03 PM IST

MHC quashed NGT's order: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு 800 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு டான்ஜெட்கோ 1% வழங்க வேண்டாம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் வட சென்னையில் வருடத்தின் பாதி நாட்கள் காற்று மாசுவை ஏற்படுத்துவதாகவும், எண்ணூர்-மணலியில் செயல்படும் என்.சி.டி.பி.எஸ், என்.டி.இ.சி.எல், சி.பி.சி.எல், டி.பி.எல், எம்.பி.எல், எம்.எஃப்.எல் காரணமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அந்த விசாரணையில், 6 நிறுவனங்களும் தங்கள் வருட வருவாயில் 1 சதவிகிதத்தை மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என 2023-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பொதுத்துறை நிறுவனமான மின் உற்பத்தி பகிர்மான கழகம், கடந்த 2021-2022-இல் 11 ஆயிரத்து 954 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக, இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனில் இயங்கி வரும் நிறுவனம், 800 கோடி (1 சதவிகிதம்) ரூபாய் நிவாரணமாக அளிப்பது பொருளாதார ரீதியில் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு 1 சதவிகிதிம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சமூக ஆர்வலர் கொலை வழக்கு; 8 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.. முழு விபரம்!

ABOUT THE AUTHOR

...view details