தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் பக்ரூதீன் வழக்கில் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - MADRAS HIGH COURT CASE TODAY

கொலை வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக விசாரணை கைதியாக தனிமை சிறையில் இருக்கும் போலீஸ் பக்ரூதின் சார்பாக ஆஜராக மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 9:34 PM IST

சென்னை: கொலை வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக விசாரணை கைதியாக தனிமை சிறையில் இருக்கும் போலீஸ் பக்ரூதின் சார்பாக ஆஜராக மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதியாக கடந்த 11 ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், தன்னை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதால், பொது சிறைக்கு மாற்ற சிறைத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'சிறைத் துறை அதிகாரிகளை பக்ரூதின் தாக்கியதால் அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு சில நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அவரை பழிவாங்கும் நோக்கில் சிறை அதிகாரிகள் அவரை தண்டிக்கவில்லை.' என தெரிவித்தார்.

இதையடுத்து, சிறை விதிகளின்படி பக்ருதீனுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பக்ரூதின் சார்பாக வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை நியமித்து உத்தரவிட்டனர். மேலும், பக்ரூதினுக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

காணொலியில் வாதிட அனுமதி:இதனிடையே, "1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராக இளம் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அங்கு போதுமான கழிப்பிட வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. காணொலி மூலமாக ஆஜராகி வாதிடவும் அனுமதிப்பதில்லை." என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கிறஞர், 'பூந்தமல்லி நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 412 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், 8 வெடிகுண்டு தொடர்பான வழக்குகளும் அங்கு நிலுவையில உள்ளது' எனவும்
தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெடிகுண்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட அனுமதி வழங்கினர். மேலும், நீதிமன்றத்திற்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை உறுதி செய்யவும், உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details