தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிக்கிடந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.. உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவு! - TN Primary Health Center

Madras High Court: ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:42 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், புதுராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முரளி என்ற விவசாயி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது.

இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆரம்ப சுகாதர நிலையம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால் தான் தன்னுடைய கணவர் உயிரிழந்ததாகக் கூறி, அவரின் மனைவி அருணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும் என முரளியின் மனைவி அருணா கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த முரளியின் மனைவி அருணாவுக்கு அரசுத் துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். மேலும், அவர்களின் குழந்தைககளின் கல்விச் செலவுக்காக ரூ.2 லட்சம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இரண்டு வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்! - smuggled gold seized at airport

ABOUT THE AUTHOR

...view details